Wednesday, 31 December 2014

சினம் கொள்ளடா!!


சினம் கொள்ளடா!!


பாகன் கோற் கிணங்க...
   பாய் போலுடல் மடங்க..
பாயும் வேங்கை பணியும்..
   பயமதை கண்ணில் அணியும்..

அடிமைத்தனம் மறுக்க.. அது
   அச்சக் காப் பறுக்க..
அகக் கூண் டுடைய..
   ஆறா சினமது அடைய....

பிணி துறந்த புலி.. பாருடன்
   பிணைந்து ஏற்கேன் வலி..
பரிதவிக்கிறேன்! காண, இக்காட்டை,
   பாகனிடம் படும் பாட்டை..

செவி சாயேனே வணங்கி..
   செய்யேன் அவன் சொற்கிணங்கி
செல்லிட மெல்லாம் கொள்வேன்..
   செம்முகமோடு உறுமச் செல்வேன்..

சினமது பொங்கி வழிய.. விழியில்
   சிக்கிய யாதும் அழிய..
சிந்தையில் போர்கள் வெடிக்க.. சொல்லால்
   சிதைக்க நாவது துடிக்க..

கட்டியெனை ஆள துண்ணிடுவாயோ! காலக்
   கரமதில் விலங்கிட எண்ணிடுவாயோ!
கழிவறை காகிதமாய் போகேன்! நின்
   காலணித் துடையென்றும் ஆகேன்!

குற்றம் பல இழைக்க.. எனை
   குணியச் சொல்லி அடிக்க..
குறுகியடி பணிவேனென நினைக்க..
   குமுறி எரிமலையாய் நான் வெடிக்க..

சிதறடித்துன் செருக்கை அழிப்பேன்!
   சிறுதுளியேனும் புரட்சித் தேனளிப்பேன்!
சினமே என் போர்வாள்! என்றும்
   சிரமது காணாது உன் தாள்!

No comments:

Post a Comment