Thursday, 12 June 2014

அந்த அழகிய மாலை பொழுது..


அந்த அழகிய மாலை பொழுது..


கரிய மேகங்கள் கண்ட மயில் போல் 
வாடைக் காற்றில் அசைந்தாடும் கிளைகள்..
காதல் கொண்ட இளைஞனின் மனம் போல்
காற்றில் பறந்தாடும் வாடிய இலைகள்..
இருளை கூட்டி வரும் குளிர்ந்த இரவை
அஞ்சி கூட்டிற்கு ஓடிடும் பறவை..
இந்த அழகு மாலையில்
நகரச் சாலையில்
உலகையே மறந்து நான் நடை போட..
எங்கோ கேட்டிடும் 
இன்ப ஓசையில்
மனமது நெகிழ்ந்து இமைகள் மூட..

பருவ நங்கையின் அழகு புருவமோ 
அந்தி மாலையில் தோன்றிடும் பிறை ..?
மழலைக் கண்ணனின் திரு உருவமோ 
கொஞ்சி விளையாடும் சிறுவர் படை..?
கண்களை பறித்திடும் பூக்களின் வாசம்..
ஊரெங்கும் பூக்குது காதல் நேசம்..
சில ஓவியம்..
பல காவியம்..
எதும் கூறிடாது இந்த அழகை..
இந்த தருணம்..
நாளும் வரணும்..
சொர்க்கம் ஆக்கணும் இந்த உலகை..

முக்கனிச் சுவையை கூட்டிடும் தேன் போல்
பாடிடும் குயிலின் இன்னிசை இராகம்..
கதிரவன் முகத்தை மறைத்திடும் மலைகள்-அந்த
காட்சியை காணவே நெஞ்சினில் மோகம்..
பொன்மாலை இதை போற்றும் என் கானம்-அதை
கேட்டு நாணத்தில் சிவக்கும் கீழ்வானம்..
இந்த இன்ப மாலையில்..
எழில்மிகு வேளையில்..
தனிமையில் இன்பம் காண்பதா அழகு.?
பேசி களிக்க..
மனம் விட்டு சிரிக்க..
புதுப்புது உறவை தேடிப் பழகு.. ;) 

Wednesday, 11 June 2014

முண்டாசுக்கவி


முண்டாசுக்கவி


முறுக்கி விட்ட மீசையும், முண்டாசும் வேட்டியும்
அடிமை பூட்டை உடைத்தெறியும் சொற்களெனும் ஈட்டியும்
ஏந்தி இவன் பாடி வர மாற்றம் கண்டது இப்புவி.
தமிழ் மொழியின் புதுக்கவிதை சின்னம், இவன் "மகாகவி"

ஜகத்திலே உளோரெல்லாம் வீறு கொண்டு எழுந்திட.
அகத்திலே புரட்சி தீ எரிந்து நம்மை விழுங்கிட
முகத்திலே துணிச்சலோடு ஒளி படைத்த கண்ணுடன்
கிரகத்தில் யாரும் கண்டிரா பல கவி படைத்த நாயகன்.

"நிறத்தினால் சக தோழர் தாழ்ந்துதான் போவரோ?"
"புறத்தினால் பிரித்து வைக்கும் நீயும் என்ன மூடரோ? " என
சிரத்திலே உறைக்குமாறு கேள்வி பல கேட்டவன்.
கரத்திலே கோலேந்தி சாதி களை எடுத்த பாடகன்.

அணை உடைக்கும் வெள்ளம் போல் பொங்கிடும் காதல் ராகம்
துணை இவனே கன்னனுக்கென இவன் கொண்ட மோகம்
"உனை பாடிடவே தோன்றினேன், நித்தம் ஜபிப்பேன் உன் நாமம்" என்ற 
இணையில்லா இவன் பாடல்களால் நெஞ்சிலே காதல் தாகம்.

குருதியெல்லாம் பொங்கிட விடுதலைக்கே ஏங்கிட
உறுதியோடு நின்று நம் உரிமைக்கு போராடிட
இறுதி மூச்சு உள்ள வரை இடைவிடாது உழைத்தவன். நம்மை
இணைத்திடும் பல பாட்டு படித்த கவி, இவன் மாவீரன்.

வில்லுக்கோர் விஜயன், தமிழ் சொல்லுக்கோர் அகத்தியன்.
படை என்றால் சோழன், கொடை எனில் பாரி வேந்தன்.
குறளுக்கு வள்ளுவன், கீதைக்கு பார்த்த சாரதி.
எத்துனை யுகமாயினும் தமிழ் பாட்டுக்கென்றும் "பாரதி"


Monday, 9 June 2014

ஈடில்லா உலக நாயகனே!!


ஈடில்லா உலக நாயகனே!!


தமிழ்த் திரையுலகை "ஆளவந்தான்"..
"தெனாலி"யை போல் குசும்பும் கொண்டான்..
"உன்னைப்போல் ஒருவன்" யாருமில்லை இங்கு..
"விஸ்வரூபம்" எடுக்கிறது திரை உகில் உன் பங்கு..
நீ "இந்தியன்" என்பது எங்கள் பாக்கியம்..
அதர்மத்தை எதிர்த்து "குருதிப்புனல்" கிளப்பும் உன் வாக்கியம்..
உன் "குணா"திசியன்களால் எங்களை ஈர்க்கின்றாயே..
தமிழ் திரை உலகின் "சண்டியர்" என்றும் நீயே..
நீ எறியும் "மன்மத அம்பு"களால்..
"பதினாறு வயதினிலே" பெண்களெல்லாம் ஏங்குவர்..
உன் "சிகப்பு ரோஜாக்களு"க்காக..
யாருக்கு தான் உன் "காதல் பரிசு"(ஓ)..
உம்முடன் பிறக்கா "அபூர்வ சகோதரர்கள்" நாங்கள்..
எங்களை என்றும் வழி நடத்திச் செல்லும் "நாயகன்" நீ..

Sunday, 8 June 2014

உழைப்பவனின் உதிரம்..


உழைப்பவனின் உதிரம்..


உள்ளங்கை சிவக்க உழைத்திடும் தோழர்க்கு- முடிவில் 
உதிரம், வலி,கண்ணீர் மட்டுமே மிஞ்சுவது..
ஊணை உருக்கி உழப்பது நம் தொழிலாளி-அவரை 
வாட்டி வதைக்கிறார் நம் "வள்ளல்" முதலாளி..

மறுத்திடுவாயோ உன் இலாபத்தை பகிர்ந்திட?
அறுப்பது நீயோ வேறொருவன் விதைத்திட?
கொடுப்பது உனதோ 'கொடை' போலே எண்ணிட?
தடுப்பது முறையோ அவர் வாய்ப்பை, வளர்ந்திட?

பகட்டாய் வாழவே அனுதினமும் அலைகிறோம்.
திகட்டும்போதும் செல்வம் சேர்த்திடவே முனைகிறோம்.
"வலியவன் வெல்வான்" என வாய்ப்புகளை பறிக்கிறோம்.
வலிமையை வளர்த்திட வாய்ப்பு எங்கே அளிக்கிறோம்?

உழைப்பாளர் யாவரும் ஒன்று கூடுவோம்- தோழா!
உரிமையாய் நமதென்பதை எடுத்துக் கொள்ளுவோம்!
உலகம் சுழல்வது உழைக்கும் மக்களால்- அது 
ஆளப்ப்பட வேண்டும் அவர்கள் கைகளால்!  

Saturday, 7 June 2014

வெந்து போயின இவன் பிஞ்சு விரல்கள்..


வெந்து போயின இவன் பிஞ்சு விரல்கள்.. 


வாடிய முகத்துடன் ஒரு தொழிலாளி..
ஓடி விளையாட வேண்டிய வயதில்..

கடமையை இச்சிறுவயதில் சுமத்தும்,
மடமையை என்னென்று கூற?

பட்டாசு வெடிக்க துயில் கொள்ள வேண்டியவன்,
பட்டாசு ஆலையில் துயில் கொள்கிறான்.

அவ்வப்பாவிச் சிறுவன் மீது சில்லறைகள் வீசப்படும்..
வேலையில் தவறென்று நொடிபொழுதும் ஏசப்படும்..

மிட்டாய் சுவை இனிப்பென்று தெரிந்த நமக்கு, அதை 
விற்பவனுக்கு அது கசப்பென்று ஏன் தெரியவில்லை?

குழந்தையை தொழிலாளி ஆக்கும் இந்த பொம்மலாட்டம்..
நாம் அனைவரும் கை கொட்டி பார்க்கும் களியாட்டம்..

Friday, 6 June 2014

மாமே! இது நம்ம சென்னை!



மாமே! இது நம்ம சென்னை!



பஸ் பிடிக்க கோயம்பேடு..
படியில் நின்னு கானா பாடு..
ஸ்லிப் ஆனா காசிமேடு..
வேணா மச்சி உள்ள ஓடு..

"சௌ"ண்டு னா பச்சையப்பா..
"மௌ"ண்டு  னா ஏசப்பா..
"ரௌ"ண்டு னா கத்திபாரா..
'8' அது நல்லா பார்ரா 

சினிமா னா கோடம்பாக்கம்..
கிரிக்கெட் க்கு சேப்பாக்கம்..
ஊரோரமா ஊரப்பாக்கம்..
இங்க எல்லா பொண்ணும் உன்ன பாக்கும்..

வாழ வைக்கும் இது எங்க ஊரு..
அதான் சென்னைனு இதுக்கு பேரு..
"செ"ழிக்க வைக்கும் "அன்னை" இவ பாரு..!
போதும் மச்சி.. சொல்லு ஒரு மோரு.. ! ;-) B-) 

காதல் க(வி)தை




காதல் க(வி)தை



தேடல்:

என் பாவையின் துணையுடன் வாழ்வேனோ?- இல்லை 
அவளை பார்திடாமலே மாய்வேனோ?

காணல்:

உன் விழியிரண்டின் பேரழகை வியந்து கண்ட நொடி,
விலகாது என் நெஞ்சில் பதிந்து கொண்டதடி.

நினைத்து ஏங்குதல்:

உன் புன்னகையில் நெஞ்சை புதைக்கின்றாய்.
புன்சிரிப்பால் ஏனடி வதைக்கின்றாய். 

காதல்:

வாழும் நொடி பொழுது யாவும்
உன் துணை அதிருந்தாலே போதும்!
கூறாயோ இது காதல் என்று..?
வாராயோ என் கையில் இன்று...?

வர்ணித்தல்:

உன் அழகினிலே கொஞ்சம், அடைய இயற்கை தாயும் கெஞ்சும். 
அதை கூறிடவே சொற்களுக்கு தமிழிலேயே பஞ்சம்.

சிரித்தல்:

உன் புன்சிரிப்பு போதும், என் நாடி நரம்பு யாவும்
மின்சாரம் பாய்ந்தது போல் துள்ளி விளையாடும்

முத்தம்:

உன் இதழ்கள் மிதக்கும் செம்முகிலினமா? அதன்
முத்த மழை என் மேல் பொழிந்திடுமா?

செல்ல மோதல்:

ஏசிடு பெண்ணே உன் கோபம் தீர- அனால் 
பேசிடு பின்னே என் நெஞ்சம் ஆற.
தேரி விடும் உள்ளம் நீ திட்டி விட்டாலும்- அனால் 
ஆறிடுமோ மனதில் உன் மௌனத்தின் காயம்? 

பிரிவில் ஏங்குதல்:

உன் பூமுகம் காட்டிட மாட்டாயோ? அழகில் 
சொக்கி மயங்கும் வரம் ஈட்டாயோ?

வாழ்தல்:

என் மார்பில் நீ என்றும் சாய.. உன் அன்பிலே நானும் தோய..
இந்நெருக்கம் காணாது மாய்வு.. நம் காதல் அலைக்கேது ஓய்வு..

நீங்குதல்:

என்னோடு இருப்பாய் எங்கும் போகாது.
அருகில் நீ வேண்டும் என்றும் நீங்காது.
என் உடல் நோகும் உன்னை அணைக்காது.
உன்னை காணாமல் என் உயிர் பிழைக்காது.

விரிசல்:

என் கை உன் கைகளை பிடித்திடுமோ? இல்லை  
என் கண்களின் கண்ணீரை துடைத்திடுமோ?

விலகல்:

நெஞ்சில் நீங்காத ஓர் பாரம்- தந்து 
விலகி போவாயோ தூரம்?
நீ விட்டுச் செல்லும் அந்த நேரம்.
கண்ணில் வடியும் நீரல்ல உதிரம்.

பிரிதல்:

உன் பாதச் சுவடுகள் மறையும் வழியே
என் காதல் நினைவுகள் தொலைந்திட நின்றேன்.

என் பெண்ணே!



என் பெண்ணே!




வண்ணமயில் போலாடும் தேவமுகப் பெண்ணே- உன்
எழில்பொங்கும் பேரழகை கூற வந்தேன் கண்ணே.

உனைப் பாடுவதற்காக மனம் துடிதிருந்ததற்காக- உன்னை
கண்முன்னே நிறுத்தி இந்த அணி சேர்த்தேன் உனக்காக.

உன் அழகினிலே கொஞ்சம், பெற இயற்கை தாயும் கெஞ்சும்
அதைக் கூறிடவே சொற்களுக்கு தமிழிலேயே பஞ்சம்.

தேவதையா நீ? இல்லை. பேரழகா? அதும் இல்லை.
இறைவன் அவன் தானே கண்டெடுத்த பிள்ளை.

உன் விழியிருந்து பாயும் பல மின்கதிர்களின் மாயம்- அதை
கண்டிருக்க என் காத்திருப்பு என்று தான் ஓயும்

சொக்க வைக்கும் உந்தன் பூமுகமதனைக் கண்டு
தவிடுபொடி ஆகி போன நெஞ்சம் பல உண்டு.

உன் புன்சிரிப்பு போதும், என் நாடி நரம்பு யாவும்
மின்சாரம் பாய்ந்தது போல் துள்ளி விளையாடும்.

கொஞ்சும் குரலின் மயக்கம். பேர்  இசையாவும் தோற்கும்- அதைக் 
கேட்டிருந்தாலே போதும் என் பிணி யாவும் விலகும்.

மெலிதாய் வளையும் உன் இடை எனும் பொற்கொடியில்
வலிய வந்து சிக்கிக்கொண்டேனே ஒரு நொடியில்.

கறுநீரைப் பொழியும் போல் உள்ள குழலோ ஓர் அருவி-அந்த 
கார்கூந்தல் விரித்தாடும் பதுமை நீ, என் அழகி

மெல் இதழ்களென்ன மிதக்கின்ற செந்நிற முகிலினமா? அதன் 
முத்த மழை எந்நாளும் பொழிந்து என் மேல் விழுமா?

என் மனம் நிறைந்த பதுமை! பூமி கண்டிராத அழகை
விரைவில் கொண்டு சேர்ப்பாய் என்னிடம் இறைவா நீ